தமிழ் செய்திகள்

Sunday, August 1, 2010

பான் கீ மூனின் நிபுணர் குழு தமது உத்தியோகபூர்வ அமர்வுகளை ஆரம்பிக்கிறது



ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர் குற்றம் தொடர்பில் அமைத்துள்ள நிபுணர் குழு, தமது உத்தியோகபூர்வ அமர்வுகளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நடத்தவுள்ளது.

பான் கீ மூனின் உதவி பேச்சாளர் சௌங்கா சொய் இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், நிபுணர் குழு தமது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த பின்னர் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இலங்கையின் வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றம் உட்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவே இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிபுணர் குழு மனித உரிமை மீறல்கள் குறித்து எந்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக பேச்சாளரிடம் கேட்டபோது அவர் அதனைக் கூற மறுத்துவிட்டார்.

எனினும் தமது பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்ட பேச்சாளர் சொய், இலங்கை அரசாங்கம் தமது விசாரணைகளுக்காக இந்த அறிக்கையின் பரிந்துரைகள் தேவையென கருதுமானால் அதற்கும் இறுதியறிக்கை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment